ஒரு குழந்தை உறங்குகிறது
தேவதைகளே...
அவளுக்கு
வேர்க்காமல் விசிறிவிடுங்கள்
என் பாலைவனத்தில்
பாதம் பதித்து
நந்தவனமாக்கிய பிஞ்சு
விரல்களை நீவி விடுங்கள்
பொம்மைகளோடு கொஞ்சிக்கொஞ்சி
சோர்வடைந்த கை விரல்களில்
வலிக்காமல் சொடுக்கெடுங்கள்
காற்றில் நழுவும் மேலாடையை
விரல்படாமல் சரி செய்யுங்கள்
அவள் புரண்டு படுக்கையில்
கொலுசொலி கேட்டு
உறக்கம் கலையாது
இருக்க உதவுங்கள்
ஆழ்ந்த உறக்கத்தில்
அவள் நல்ல கனவே காண
நெற்றியில் முத்தமிட்டு
ஆசீர்வதியுங்கள்
என்னைப் போலவே
அவளது எச்சில் வழியும் முத்தத்தை
யாசகம் பெற்று பத்திரப்படுத்துங்கள்
அனுபூதி அடைவீர்கள்