செவ்வாய், 10 மே, 2011

அகத்தகத்தகத்தினிலே



உன்னைப் பார்க்கும்வரை
மழையின் மைந்தனாய் இருந்தேன்

அருவியின் தோழனானேன்

நதியாய் நடந்தேன் கடல் நோக்கி

அருவியைக் கொளுத்தும்
தீக்குச்சியோடு நீ வந்தாய்

என் கடல் வற்றியது

நீருபூத்த நெருப்பாய்
உன் ஞாபகங்கள் உள்ளுக்குள்
கனலத் தொடங்கின

எனக்கே தெரியாமல்
என் மனத்திரி கிள்ளி
நெருப்பு வைத்தாய்

மழையின் மைந்தன்
தனலில் கரைந்தேன்

தனல் உறங்கச் செல்லும்
ஒரு நாளில்
பருவ மழை வருமென
செய்தி வந்தது

பருவமழை பல கடந்தும்
அருவியைக் கொளுத்தும்
தீக்குச்சியோடு
நீ வருவாய் என தெரியும்

திங்கள், 9 மே, 2011

ஒரு குழந்தை உறங்குகிறது




ஒரு குழந்தை உறங்குகிறது


தேவதைகளே...

அவளுக்கு
வேர்க்காமல் விசிறிவிடுங்கள்

என் பாலைவனத்தில்
பாதம் பதித்து
நந்தவனமாக்கிய பிஞ்சு
விரல்களை நீவி விடுங்கள்

பொம்மைகளோடு கொஞ்சிக்கொஞ்சி
சோர்வடைந்த கை விரல்களில்
வலிக்காமல் சொடுக்கெடுங்கள்

காற்றில் நழுவும் மேலாடையை
விரல்படாமல் சரி செய்யுங்கள்

அவள் புரண்டு படுக்கையில்
கொலுசொலி கேட்டு
உறக்கம் கலையாது
இருக்க உதவுங்கள்

ஆழ்ந்த உறக்கத்தில்
அவள் நல்ல கனவே காண
நெற்றியில் முத்தமிட்டு
ஆசீர்வதியுங்கள்

என்னைப் போலவே
அவளது எச்சில் வழியும் முத்தத்தை
யாசகம் பெற்று பத்திரப்படுத்துங்கள்

அனுபூதி அடைவீர்கள்