செவ்வாய், 10 மே, 2011

அகத்தகத்தகத்தினிலே



உன்னைப் பார்க்கும்வரை
மழையின் மைந்தனாய் இருந்தேன்

அருவியின் தோழனானேன்

நதியாய் நடந்தேன் கடல் நோக்கி

அருவியைக் கொளுத்தும்
தீக்குச்சியோடு நீ வந்தாய்

என் கடல் வற்றியது

நீருபூத்த நெருப்பாய்
உன் ஞாபகங்கள் உள்ளுக்குள்
கனலத் தொடங்கின

எனக்கே தெரியாமல்
என் மனத்திரி கிள்ளி
நெருப்பு வைத்தாய்

மழையின் மைந்தன்
தனலில் கரைந்தேன்

தனல் உறங்கச் செல்லும்
ஒரு நாளில்
பருவ மழை வருமென
செய்தி வந்தது

பருவமழை பல கடந்தும்
அருவியைக் கொளுத்தும்
தீக்குச்சியோடு
நீ வருவாய் என தெரியும்

திங்கள், 9 மே, 2011

ஒரு குழந்தை உறங்குகிறது




ஒரு குழந்தை உறங்குகிறது


தேவதைகளே...

அவளுக்கு
வேர்க்காமல் விசிறிவிடுங்கள்

என் பாலைவனத்தில்
பாதம் பதித்து
நந்தவனமாக்கிய பிஞ்சு
விரல்களை நீவி விடுங்கள்

பொம்மைகளோடு கொஞ்சிக்கொஞ்சி
சோர்வடைந்த கை விரல்களில்
வலிக்காமல் சொடுக்கெடுங்கள்

காற்றில் நழுவும் மேலாடையை
விரல்படாமல் சரி செய்யுங்கள்

அவள் புரண்டு படுக்கையில்
கொலுசொலி கேட்டு
உறக்கம் கலையாது
இருக்க உதவுங்கள்

ஆழ்ந்த உறக்கத்தில்
அவள் நல்ல கனவே காண
நெற்றியில் முத்தமிட்டு
ஆசீர்வதியுங்கள்

என்னைப் போலவே
அவளது எச்சில் வழியும் முத்தத்தை
யாசகம் பெற்று பத்திரப்படுத்துங்கள்

அனுபூதி அடைவீர்கள்

செவ்வாய், 15 மார்ச், 2011

எனக்கும் அந்த கண்றாவி (காதல்) வந்தபோது...



1
மனப்பாறை இடுக்குகளில்
கூழாங்கற்கள் உருள்கின்றன.


தாண்ட முடியாத,
பாம்புகள் அடர்ந்த
பாழும் கிணறு ஒன்றை
நாங்களும் தாண்டத் துணிந்தோம்.


மார்கழிக் காலையில்
மொண்டு குளிக்க வரும் உனக்காக
கிணற்று நீருக்குள்
ஒளித்து வைக்கிறேன்
என் உள்ளத்து கதகதப்பை.


இது ஒரு இசை நாற்காலி
இந்த நொடி நமக்கே நமக்கு.


5
ஆதலினால்
அரசு வேலை தேடுவீர்.


அது
வேகமாய் சுற்றும் ரங்கராட்டினத்தின்
இறங்கு விசை பரவசம்.


ரத்தத்தில் கடிதம் எழுதும்
காதல் கதைகளை இப்போது கேட்டால்
திகிலாக இருக்கிறது.


26 வயதினிலேயும்
அலைகள் ஓய்வதில்லை.


தமிழில்
FLAMES போட்டுப் பார்த்தேன்,
நம் இருவர் பெயரிலும்
ஒற்றெழுத்து இல்லை.


10
லவ்
அண்டு
லவ்
ஒன்லி.


11 
அப்துல் ரஹ்மானின் 'ஆலாபனை'
மு.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்'
வைரமுத்துவின் 'காவி நிறத்தில் ஒரு காதல்'
பா.விஜயின் 'சில்மிஷியே'
தபூ ஷங்கரின் 'வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்'
நாலு இட்லி
ஒரு மசால் தோசை
பார்சல்.


12 
தாமரைக் குளம்
உடைந்த வளையல்
தாவணிக் கனவு
கன்னத்து பரு
கவிதை ஓவர் ஓவர்.


13
காதலிப்பது என்பது
கடன் வாங்குவதைப் போல,
அவ்வளவு கஷ்டமில்லை.
கல்யாணம் செய்து கொள்வது என்பது
அந்தக் கடனை திருப்பிக் கொடுப்பது போல,
அவ்வளவு சுலபமில்லை.


14
எல்லார் போலவே
வாடகை வீடு
ரேஷன் கடை
மாத கடைசி
மளிகை கடை அக்கௌன்ட் என
'வாழ்ந்து காட்டவே' வந்திருக்கிறேன்.


15
காதல் கவிதை எழுதுவது
சாராயம் காய்ச்சுவதற்கு ஒப்பானது,
நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு
இரண்டுமே கேடு.