செவ்வாய், 19 மார்ச், 2013

மத்திய அரசின் இந்தித் திணிப்பும் பாதிக்கப்படும் தமிழக மாணவர்களும்


தமிழர் வாழ்வு, தமிழர் கலாச்சாரம், தமிழரின் வளர்ச்சி என தமிழ் சார்ந்த சகலத்தையும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி அழித்தொழிப்பதுதான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் முழுமுதற் கொள்கை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இதுவரை அரசியல் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாடுகளையும், முடிவுகளையும் எடுத்துவந்த காங்கிரஸ் அரசு, தற்போது கையில் எடுத்திருப்பது நாட்டின் மதிப்புமிக்க தேர்வுகளில் ஒன்றான குடிமைப் பணித் தேர்வு.

தேர்வு முறையில் மாற்றங்கள்

”தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப, குடிமைப் பணித் தேர்வுகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், பேராசிரியருமான அருண் எஸ். நிகாவேகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நடப்பாண்டில் இருந்தே புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன” என்று போகிறபோக்கில் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டு இருக்கிறது குடிமைப் பணித் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்.



குடிமைப் பணித் தேர்வுகள் முதல்கட்டத் தேர்வு, முக்கியத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. புதிய மாற்றங்களின்படி, முதல்கட்டத் தேர்வில் விருப்பப் பாடங்களைக் குறைத்து, பொது அறிவு மற்றும் பொதுப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. முதல்கட்டத் தேர்வு எழுதுவோரில் குறைந்தபட்சம் 25 பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே, அந்தப் பிராந்திய மொழியில் முக்கியத் தேர்வை எழுத முடியும். ஆனால், இந்த விதிமுறை இந்தி அல்லது ஆங்கிலத்துக்குப் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பட்டப் படிப்பில் படித்த மொழியில் மட்டுமே முக்கியத் தேர்வை எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அதோடு, பட்டப் படிப்பில் தமிழ் இலக்கியம் படித்திருந்தால் மட்டுமே, முக்கியத் தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். இப்படியாக, குடிமைப் பணித் தேர்வு முறை மாற்றங்கள், தமிழ் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிராந்திய மொழிகள் அனைத்திற்கும் எதிரானதாக இருக்கிறது.

விரைவில் தமிழ் நீக்கப்படும்

பட்டப் படிப்பில் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற புதிய விதியால் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே முக்கியத் தேர்வை எழுத முடியும். இதனால் 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை ஒருபோதும் அடையவே முடியாது. எனவே ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் தமிழ் மாணவர்களுக்கு ஏற்படும். ஒன்றிரண்டு வருடங்களை இப்படியாகக் கடத்திவிட்டு, திடீரென ‘தமிழ் மொழியில் தேர்வெழுத மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனவே விருப்பப்பாட பட்டியலில் இருந்து தமிழ் நீக்கப்படுகிறது’ என மத்திய அரசு அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தமிழ் இலக்கியமும் சிவில் சர்வீஸ் தேர்வும்

அதேபோல, தமிழ் மொழியில் தேர்வெழுதும் பெரும்பாலானோர் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்தே எழுதுகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கும் சமூக பொறுப்புடைமைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. காரணம், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பின்னாட்களில் சமூக பொறுப்புணர்வு மிக்க அதிகாரிகளாக வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டில் தற்போது அரசுத் துறைச் செயலாளர்களாகப் பணியில் இருக்கும் இறையன்பு, அமுதா, உதயச்சந்திரன், கூலித் தொழிலாளியின் மகனாக இருந்தாலும், தமிழ் வழியில் தேர்வெழுதி, வெற்றி பெற்று, தற்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் நந்தகுமார் ஆகியோர் தமிழ் இலக்கியத்தைத் தெரிவு செய்தவர்கள்.

தற்போது பீகார் மாநிலத்தில் பணியில் இருக்கும் ராஜராஜசோழன் என்ற அதிகாரி, தமிழ் வழியில் தேர்வெழுதி, பொது அறிவுப் பாடத்தில் பெற்ற 440 என்ற மதிப்பெண்ணை, அதற்குப் பிறகு இந்தியாவிலேயே யாராலும் (இந்தியில் தேர்வெழுதும் எந்தக் கொம்பனாலும்) நெருங்கக் கூட முடியவில்லை. சீனிவாசன் என்பவர் தமிழில் தேர்வெழுதி முதல் முயற்சியிலேயே தரவரிசைப் பட்டியலில் 140க்குள்ளாக வந்து, தற்போது ஹரியானாவில் பணியில் இருக்கிறார். இவர்களைப் போலவே, மகாராஷ்டிராவில் சேவியர், ஐ.பி.எஸ்., தினகரன் ஐ.ஆர்.எஸ்., பஞ்சாபில் செழியன் ஐ.பி.எஸ்., அசாமில் ஹபீப் ஐ.பி.எஸ்., பீகாரில் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்., ஒடிசாவில் பூவேந்திரன் ஐ.ஏ.எஸ் என தமிழ் வழியிலும், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எழுதியும் இந்தியா முழுக்க எண்ணற்ற அதிகாரிகள் கொடிநாட்டி வருகிறார்கள். இதையெல்லாம் ஒடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே புதிய விதிமுறைகளை, பிராந்திய மொழிகளுக்கெதிராக வடிவமைத்திருக்கிறது மத்திய அரசு.



தமிழ் மாணவர்களுக்கு இரண்டாவது பேரிடி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -1 தேர்வு (இந்த வருடம் முதல் மாநில குடிமைப் பணித் தேர்வு எனப் பெயர் மாற்றப்படுகிறது)க்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் மொழி தவிர பெரிதாக வேறு எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், டி.என்.பி.எஸ்.சியின் குரூப் – 1 தேர்வை தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதும் அதே நேரத்தில், யு.பி.எஸ்.சியின் சிவில் சர்வீஸ் தேர்வை சுமார் 25 ஆயிரம் பேர் மட்டுமே எழுதுகின்றனர். காரணம், சிவில் சர்வீஸ் முதல்கட்டத் தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்பதால்தான். இப்போது முக்கியத் தேர்விலும் இந்தித் திணிப்பு அரங்கேறிவிட்டதால், இனி இந்த 25 ஆயிரம் என்ற எண்ணிக்கை கட்டெறுப்பாய்த் தேயும்.

அனைத்திலும் விதிமீறல்

விதிமுறை மாற்ற முடிவை எடுத்ததில் அரசியலமைப்புச் சட்டம், சிறந்த ஆட்சிக்கான அம்சங்கள், பகுத்தறிந்து பார்ப்பது என அனைத்தையும் மீறி இருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் முடிவுகளில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற ஆட்சி மொழி ஆணையத்தின் பரிந்துரை மீறப்பட்டிருக்கிறது. பொறுப்புடைமை (accountability), வெளிப்படைத் தன்மை (transparency), சமூக சமத்துவம் (social equality), ஒருங்கிணைந்த வளர்ச்சி (inclusive growth), அனைவரின் பங்களிப்பு (participation) என சிறந்த ஆட்சிக்கான அம்சங்களில் எதுவும் பின்பற்றப்படவில்லை. அதேபோல, புதிய விதிகளில், 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கை குறித்து in the interest of maintaining standard and quality of the examination என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 25 பேருக்கு மேல் தேர்வு எழுதினால்தான் தேர்வின் தரம் பேணப்படும் என்பது எந்த வகையிலும் பகுத்தறிவுக்கு உகந்ததாக இல்லை.

இந்திக்கு ஆதரவாய் வடக்கு

குடிமைப் பணித் தேர்வின் பழைய விதிமுறைகளின் படி, முதல் கட்டத் தேர்வில் ஆங்கிலம் என்பது வெறும் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்கும். அதில் பெறும் மதிப்பெண் முக்கியத் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால், புதிய விதிமுறைப்படி முதல் கட்டத் தேர்வில் ஆங்கிலத்தில் பெறும் மதிப்பெண் முக்கியத் தேர்விலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஒரு விதிமுறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் பிரித்விராஜ் சவுகான். அதேபோல, கடந்த 2000ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் கொண்டுவரப்பட்ட மிகச் சிறிய மாற்றங்களைக்கூட எதிர்த்து, தேர்வு மையங்களில் புகுந்து சூறையாடியது சிவசேனா கட்சி. ஆனால், இப்போது பிராந்திய மொழிகளுக்கு மிகப் பெரிய அளவில் அநீதி இழைக்கப்பட்டிருக்கும் நிலையில், சிவசேனா மவுனம் சாதிக்கிறது. மேலும், தமிழகம் மட்டுமல்லாமல், பாதிக்கப்படவுள்ள மற்ற பிராந்திய மொழி சார்பாகவும் இதுவரை வலுவான எதிர்ப்புக் குரல் எழவில்லை. இதன் மூலம் வடக்கில் கோலோச்சும் கட்சிகள், பிராந்திய மொழியைக் காட்டிலும் இந்திக்கே வக்காலத்து வாங்குகின்றன என்பது தெளிவாகிறது.



தமிழ்நாட்டுக்குப் பிரதிநிதி இல்லை

கடந்த 2006ம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் பிரதிநிதியாக யு.பி.எஸ்.சியின் வாரிய உறுப்பினராக அங்கம் வகித்தார், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி. அவருக்குப் பிறகு அந்தப் பதவி காலியாக வைக்கப்பட்டு இருப்பதால், இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் எழுப்பக்கூட வாரியத்திற்குள் வாய்ப்பில்லை.

தமிழக அரசின் மவுனம்

குடிமைப் பணியைப் பொறுத்தவரை, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகள் அகில இந்திய சேவையாகவும், ஐ.ஆர்.எஸ் பணிகள் மத்திய சேவையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இவற்றில் அகில இந்திய சேவையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து மாநில அரசுகளிடம் எழுத்து மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி, இந்த சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறை மாற்றம் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஏற்கனவே மத்திய அரசின் விருப்பப்படி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஒப்புதல் அளித்தது தமிழக அரசு. அதேபோல, IIT-JEE தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, குஜராத்தியிலும் எழுதலாம் என விதிமுறை தளர்த்தப்பட்ட போது, தமிழில் எழுதும் வாய்ப்பு குறித்து தமிழக அரசு கோரிக்கை வைக்கவில்லை. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, குடிமைப் பணித் தேர்வு முறை மாற்றத்திற்கும் தமிழக அரசு சத்தமில்லாமல் ஒப்புதல் அளித்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

நாசகார காங்கிரசும் நாதாரி சாமிகளும்

குடிமைப் பணி தேர்வு விதிமுறை மாற்றம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, அதற்கு எழுத்து மூலம் பதில் அளித்தார் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் நாராயணசாமி. அதில் “காலத்தேவையைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது” என சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தேசிய இன மொழிகளை ஒடுக்கும் கட்சி; வெறுப்பு அரசியலில் தோய்ந்துள்ள கட்சி என்பது மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்தி

தமிழகத்தில் இருந்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க தலைவர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் இந்த புதிய மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சுமார் 60 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து யு.பி.எஸ்.சியின் புதிய மாற்றங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

புதன், 17 அக்டோபர், 2012

கல்விக் கடனும் தேசியமய வங்கிகளின் பித்தலாட்டமும்



சிவகங்கைச் சீமான் . சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோதும், பிறகு உள்துறை அமைச்சராக ஆன பிறகும் தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும் தவறாமல் கல்விக் கடன் பற்றிப் பேசியதைக் கேட்டிருப்போம்

• சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “மாணவர்களின் கல்விக் கடனுக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுவரை 14 ஆயிரத்து 84 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது (22.02.2009).

• காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பேசிய அவர், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின், கல்விக் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த மார்ச் வரை 16 லட்சம் மாணவர்களுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். வரும் 2015ம் ஆண்டுக்குள் ரூ.50 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்கப்படும் (30.08.2009).

• கோவையை அடுத்த வெள்ளலூரில் காமராஜர் சிலை திறப்பு விழாவில் பேசிய அவர், “கடந்த 2008-09ம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.5 ஆயிரத்து 16 கோடி கல்விக்கடன் தரப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் அதிகமாக கல்விக்கடன் வழங்கி உள்ளோம். அதற்கு காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் காமராஜர் வித்திட்ட இலவசக்கல்வி என்ற விதை. அது தற்போது விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இந்திய அளவில் கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முதல் இடத்தை பெற்று உள்ளது (27.01.2010).

இப்படியாக கல்விக் கடன் பெறுவது என்பது ஏதோ கைமாற்று வாங்குவதைப் போல எளிதானது என்கிற பிம்பத்தை அவர் பத்திரிகைகள் மூலமாக ஏற்படுத்தி வந்திருக்கிறார். உண்மையில், கல்விக் கடன் பெறுவதில் எத்தனை சிரமங்கள் இருக்கின்றன என்பதை கிராமப்புறங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களைக் கேட்டால் புரியும். சென்னை போன்ற பெருநகரங்களில் முதலீட்டு ஆலோசகர்கள், கல்வி ஆலோசகர்கள் வரிசையில் இப்போது கல்விக் கடன் ஆலோசகர்கள் பெருகிவிட்டார்கள். சென்னையில் உள்ள ஒரு கல்விக் கடன் ஆலோசனை நிறுவனத்திற்கு Education Loan Task Force (?!) என்று பெயர். அந்த அளவிற்கு வங்கிகளிடம் கல்விக் கடன் பெறுவது என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டும் விஷயமாக இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ் என்ற மாணவர், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி, இவருக்கு மூன்றாண்டு படிப்பிற்குத் தேவையான ரூ.4 லட்சத்தை கல்விக் கடனாக வழங்க முன்வந்தது. முதலாமாண்டு தவணை தரும்போது, இதற்கு வட்டி எதுவும் கட்டத் தேவையில்லை என்று கூறிய அந்த வங்கி, இரண்டாமாண்டு தவணையில் 20 சதவீத வட்டியை பிடித்துக் கொண்டு கொடுத்தது. மாணவர் நேரில் சென்று விசாரித்தபோது, இந்திய ரிசர்வ் வங்கி இப்போது விதிமுறைகளை மாற்றிவிட்டது என்று கூறி வங்கியே தயாரித்த போலியான விதிமுறை பட்டியலை (word file) காட்டியிருக்கிறது. விவரம் தெரிந்த அந்த மாணவர் ஊடகங்களின் உதவியை நாடியிருக்கிறார்.

அதேபோல, வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு, அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கல்விக் கடன் மறுக்கப்பட்டிருக்கிறது (அவர்கள் பொறுப்புணர்வுடன் கடனைத் திருப்பிக் கட்டுவதில்லை என்றது அந்த வங்கி). இதனையடுத்து வேலூரைச் சேர்ந்த நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, உடனடியாக அந்த மாணவருக்கு கல்விக் கடனைத் தர முன்வந்தது அந்த தேசியமய வங்கி. இருந்தும், விடாப்பிடியாக மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எதன் அடிப்படையில் அந்த மாணவருக்கு கல்விக் கடன் தர மறுத்தீர்கள்? இப்போது திடீரென எதன் அடிப்படையில் கல்விக் கடன் தர ஒப்புக்கொண்டீர்கள்? என்று கேட்க, கல்விக் கடன் தர மறுத்த / பிறகு ஒப்புக்கொண்ட அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இப்படியாக, கல்விக் கடன் பெறுவதென்பது கல்வி நிறுவனங்களில் இடம் பிடிப்பதைவிடவும் கடினமான காரியமாக மாறிவருகிறது. ஒரு மாணவருக்கு கல்விக் கடன் தர முடியாது என்பதற்கு வங்கிகள் கூறும் பொதுவான காரணங்கள்:

• மாணவரின் வார்டு (உள்ளாட்சி நிர்வாகத்தில் வட்டம்)க்கு ஒதுக்கப்பட்ட வங்கியையே அணுக வேண்டும்; எங்கள் வங்கியை அல்ல.
• கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது.
• கல்விக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ஏற்கனவே பல மாணவர்களுக்கு ஒதுக்கிவிட்டோம்.
• மாணவர் பெற்ற மதிப்பெண் குறைவாக இருக்கிறது.
• மாணவரின் தந்தை / காப்பாளர் ஏற்கனவே வாங்கிய கடனை சரிவர கட்டவில்லை.
• எங்கள் வங்கி கல்விக் கடனை சிறிதுகாலம் நிறுத்தி வைத்துள்ளது.
• குறிப்பிட்ட பிரிவினருக்கு (தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர்) நாங்கள் கல்விக் கடன் தருவதில்லை.



மேற்குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சட்டப்பூர்வமானதல்ல. மேற்கண்ட காரணங்களை ஒரு வங்கி கூறுமானால் அதனை எழுத்துப்பூர்வமாக பெற்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளையோ, நீதிமன்றங்களையோ மாணவர்கள் அணுகலாம். எனவேதான், இந்திய வங்கியாளர்கள் சங்கம், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி,

கல்விக் கடன் பெறுவதற்கான தகுதிகள் (விதி எண்:4.1):
மாணவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். மேல்நிலைக் கல்வி மதிப்பெண் அல்லது நுழைவுத்தேர்வு மூலம் இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்க்கைகான அனுமதி கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண் அல்லது நுழைவுத்தேர்வு தேவைப்படாத முதுநிலைக் கல்வியாக இருந்தால் கல்வி நிறுவனத்தின் தரம், வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் கல்விக் கடன் தரலாமா, வேண்டாமா என்பதை வங்கிகளே முடிவு செய்து கொள்ளலாம்

எந்தெந்த படிப்புகளுக்கு கல்விக் கடன் பெறலாம் (விதி எண்:4.2):
இந்தியாவில் படிப்பதாக இருந்தால், மத்திய - மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE), அகில இந்திய வங்கிப் பணிகள் கூட்டமைப்பு (AIBMS), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) போன்றவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / கல்வி நிறுவனங்கள் தரும் படிப்புகளுக்கு கல்விக் கடன் பெறலாம். CA, CFA, ICWA போன்ற வணிகவியல் படிப்புகள், IIM, IIT, IISc, XLRI, NIFT, NID போன்ற மத்திய அரசு கல்வி நிறுவங்களில் பயிலவதற்கும் கல்விக் கடன் பெறலாம். ஏரோனாட்டிக்கல், பைலட் பயிற்சி போன்ற படிப்பாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனம் விமான போக்குவரத்துத் துறையின் அங்கீகாரத்தையும், ஷிப்பிங் போன்ற படிப்பாக இருந்தால் அந்த கல்வி நிறுவனம் கப்பல் போக்குவரத்துத் துறையின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். வெளிநாடுகளில் படிப்பதாக இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் தரும் வேலைவாய்ப்புள்ள படிப்புகளுக்கும், MBA, MCA, MS போன்ற முதுநிலை படிப்புகளுக்கும் கல்விக் கடன் பெறலாம்.

எந்தெந்த செலவுகளுக்கு கல்விக் கடன் பெறலாம் (விதி எண்:4.3):
கல்விக் கட்டணம், தங்குமிடக் கட்டணம், தேர்வு, நூலகம், ஆய்வுக் கூட கட்டணங்கள், மாணவர் காப்பீட்டுக் கட்டணம், வெளிநாட்டுப் படிப்பாக இருந்தால் பயணச் செலவு, புத்தகங்கள், உபகரணங்கள், சீருடைகள், கணினி போன்றவை வாங்குவதற்காகவும் கல்விக் கடன் பெறலாம்.

அதிகபட்ச கடன் வரம்பு மற்றும் வட்டி விகிதம் (விதி எண்: 5 & 6):
இந்தியாவில் படிப்பவருக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் படிப்பவராக இருந்தால் அதிகபட்சமாக ரூ.20 லட்சமும் வங்கிக் கடனாக பெறலாம். ஆனால், கல்வி நிறுவனத்தைப் பொறுத்து இந்த உச்ச வரம்பை வங்கிகள் முடிவு செய்யும். தேவைப்பட்டால், மத்திய வட்டி மானியத் திட்டத்தின் கீழ் இந்தக் கடனுக்கு வட்டிக் குறைப்பையும் வங்கிகள் செய்யலாம். வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு வட்டி கிடையாது. ரூ.4 லட்சத்திற்கு மேற்பட்ட கடனுக்கு, உள்நாட்டில் படிப்பவர் என்றால் 5 சதவீதமும், வெளிநாட்டில் படிப்பவர் என்றால் 15 சதவீதமும் வட்டி வசூலித்துக் கொள்ளலாம். அல்லது ரூ.4 லட்சத்திற்கு மேற்பட்ட கல்விக் கடனுக்கு BPLR எனப்படும் Benchmark Prime Lending Rate- விடவும் 1 சதவிகிதம் கூடுதலாக வட்டி வசூலித்துக் கொள்ளலாம் (BPLR என்பது வங்கிகள் தனக்கான நிதி நிலையின்படி, 9 முதல் 14 சதவீதத்திற்குள்ளாக நிர்ணயித்துக் கொள்ளும்பொதுவானவட்டி விகிதம்). (கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் போலவே, கல்விக் கடன் தொடர்பான விதிமுறைகளிலும் பல ஓட்டைகள் இருக்கின்றன என்பது விவாதத்திற்குரிய ஒன்று).



இவைபோன்ற தகவல்கள் எதுவும் தெரியாத கிராமப்புறங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு கடைசிவரைக்கும் கல்விக்கடன் தராமல் இழுத்தடித்து, அவர்கள் கல்வியைத் தொடரவே முடியாமல் போன கதைகள் ஏராளம் இருக்கின்றன. மாணவர்கள் இழுத்தடிக்கப்படுவது தவிர்க்கப்பட, கல்விக் கடன் விண்ணப்பங்களை வங்கிகளிடம் நேரில் தராமல், இணைய தளம் (Online Application) மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதனையும் பெரும்பாலான தேசியமய வங்கிகள் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டுவிடுகின்றன.

வங்கிகளைப் பொறுத்தவரைக்கும் கல்விக் கடன் பிரிவை வராக்கடன் பிரிவாகவே கருதுகின்றன. பல தேசியமய வங்கிகளில் கல்விக் கடன் பிரிவில் பணியாற்றும் மேலாளர்களுக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பதவி உயர்வே வழங்கப்படுவதில்லை. அதனால், கல்விக் கடன் பிரிவுக்கு மாற்றலாகி வரும் மேலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வேறு பிரிவுக்கு மாறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவில் கல்விக் கடன் வழங்காமல் இருப்பதே தனக்கு நல்லது என்ற அவர்கள் நினைக்கின்றனர்.



இந்தியாவின் முதல்தர தேசிய வங்கியின் தமிழக தலைமையகத்தில் பணிபுரியும் முதன்மை மேலாளர் ஒருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர் கல்விக் கடன் பிரிவின் தலைமை மேலாளராகப் பணிபுரிந்தபோது மிக அதிக அளவாக தமிழ்நாடு முழுக்க 3 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கியதை பெருமையுடன் குறிப்பிட்டார். இந்திய தேசியமய வங்கிகளின் கல்விக் கடன் வரலாற்றில் இது ஒரு சாதனை என்றார் அவர். அதாவது, பொறியியல், மருத்துவம், கலைஅறிவியல், கல்வியியல் படிப்புகள் என ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் உயர் கல்வியில் சேரும் ஒரு மாநிலத்தில் ஒரு முதல்தர தேசியமய வங்கி மிக அதிக அளவாக 3 ஆயிரம் பேருக்கு கல்விக் கடன் வழங்கியதுதான் சாதனையாம்

தேசியமய வங்கிகள்தான் இப்படி என்றால், தனியார் வங்கிகளின் கல்விக் கடன் வன்முறை சொல்லில் அடங்காதது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்காக சும்மா பெயரளவில் கல்விக் கடன் வழங்குவதாகச் சொல்லும் தனியார் வங்கிகள், உண்மையில் 10 சதவீதம் கூட கல்விக் கடன் வழங்குவதில்லை. அந்த 10 சதவீதத்திலும் உயர் சாதியினர், வங்கி மேலாளர்களுக்கு வேண்டப்பட்டவர்கள், கல்விக் கடன் ஆலோசகர்கள் கைகாட்டும் மாணவர்கள் ஆகியோருக்குத்தான் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

உயர் கல்வியைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் 80 லட்சம் பேர் பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் சுமார் 40 லட்சம் பேர் மட்டுமே அந்தப் படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கின்றனர். சுமார் 90 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களில் சுமார் 72 ஆயிரம் பேர் மட்டுமே ஐந்தரை ஆண்டு படிப்பை முடிக்கின்றனர். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை முடிக்காத மீதமுள்ள மாணவர்கள் என்ன ஆனார்கள்? 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் அகில இந்திய நுழைவுத்தேர்வுகளின் மதிப்பெண் பந்தயத்தில் முந்திச் சென்று பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடிக்க முடிந்த அவர்களால் ஏன் அந்தப் படிப்புகளை வெற்றிகரமாக படித்து முடிக்க இயலவில்லை? ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கல்விக் கடன் சாதனைகளை காரைக்குடியில் பட்டியலிடும் சிவகங்கைச் சீமான் இதற்கு பதில் அளிப்பாரா?