புதன், 24 ஆகஸ்ட், 2011

அருந்ததி ராயின் எதிர்ப்புக் குரல்

அன்னா ஹசாரேவுக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு பெருகி வருவதாக சொல்லப்படுகிறது. எனக்குத் தெரிந்த வரையில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக சென்னையில் நடக்கும் ‘ஊழல் எதிர்ப்பு’ போராட்டத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும் பார்ப்பனர்கள் - இந்துக்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களும், வட இந்தியர்களுமே அதிகம் தென்படுகிறார்கள் (இவர்கள் தவிர, சில ‘தமிழர்களும்,’ சில ‘சூத்திரர்களும்’ இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை). ஆனால், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் தீ போல பரவி வருவதாக ஊடகங்கள் பரப்பி வருகின்றன. ஊடகத்தில் பணிபுரியும் எனக்கே இது விசித்திரமாகப் படுகிறது. சமூகப் போராளி அருந்ததி ராயின் ‘மக்கள் ஆதரவு’ பற்றிய பேச்சு, இந்த விசித்திரத்திற்கு விடை தருகிறது…


“மக்கள் ஆதரவு… மக்கள் ஆதரவு… என்கிறார்கள். இந்த ‘மக்கள்’ கடந்த 10 ஆண்டுகளாக, ஆயுதப் படைகளுக்கு வழங்கிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக, கடந்த ஆறு வருடங்களாகப் போராடி வரும் ஜகத்சிங்பூர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ கங்கை ஆறு மாசுபட்டு வருகிறது, அதனால் சுரங்கத் தொழிலைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி பட்டினிப் போராட்டம் நடத்திச் செத்துப்போன சுவாமி நிகமானந்த்க்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல. 


இந்த ‘மக்கள்’ நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வருகிற சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பவர்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் மக்களுடன் நிற்பவர்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ ஹரியானாவிலும், நொய்டாவிலும் தற்கொலை செய்து சாகும் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கொதித்தவர்கள் அல்ல. இந்த ‘மக்கள்’ நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆதிவாசிகளின் நிலையை உணர்ந்தவர்கள் அல்ல. ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆதரவு பெருகுகிறது என்கிறார்கள். உண்மையில் இது வெறும் நாடகப் பிரச்சாரம்!” - அருந்ததி ராய்