வெள்ளி, 6 மே, 2011

கே.வி.ஆனந்தின் ‘என்னமோ, ஏதோ!’



இந்த வலைப்பக்கத்தில் சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், தமிழ் சினிமாவில் கே.வி.ஆனந்த் தூவியிருக்கும் கோ என்கிற விஷ விதை என்னை எழுத வைக்கிறது.

எண்பதாண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் அரசியல் திரைப்படங்கள் என்பவை பெரும்பாலும் அரைவேக்காட்டுத் தனமாகவே எடுக்கப்பட்டுள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. பராசக்தி, தண்ணீர் தண்ணீர், குப்பி போன்ற வெகு சில அரசியல் திரைப்படங்கள் இவற்றில் விதிவிலக்கு.

தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் ஜாம்பவான்களாக பேசப்பட்ட இயக்குனர்களே இடறி விழும் பள்ளமாக இன்னமும் இருப்பது அரசியல் திரைப்பட முயற்சிகள்தான். அதற்கு வாழும் உதாரணமாக கண்முன் நிற்பவர் மணிரத்னம். மணிரத்னத்தின் ரோஜா தொடங்கி, ராவணன் வரைக்குமான அனைத்து அரசியல் திரைப்படங்களும் அரைவேக்காட்டுத் தனமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு அடுத்தபடியாக அரசியல் படங்களை குத்தகைக்கு எடுத்திருப்பவர் இயக்குனர் ஷங்கர். தி.மு.கவின் ஊழல்களைப் போல அரசியலை என்னதான் பிரம்மாண்டமாக திரையில் காட்டினாலும், அது இட்லி உப்புமா தவிர வேறில்லை.

இன்னொரு பக்கம், "எனக்கு குஜராத்தைக் காட்டிலும் ஈரோடு பக்கமாகத் தெரிகிறது" என்று திராவிடத்தையும், தேசியத்தையும் தயிர் சாதத்தோடு சேர்த்து, நீண்ட காலமாகப் பிசைந்து வரும் கமல்ஹாசனின் இந்துத்துவா முகம் உன்னைப் போல் ஒருவன் படத்தில் கிழிந்தது.

இப்படிப்பட்ட சூழலில் எங்கூட்டுக்காரனும் கச்சேரிக்குப் போன கதையாக அரசியல் படம் ஒன்றை எடுத்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். ‘ஸ்கூப் நியூஸ்’ மூலம் இருவேறு அரசியல் எதிரிகளை அடுத்தடுத்து பந்தாடும் ‘தின அஞ்சல்’ நாளிதழ், மாற்று அரசியலை முன்வைக்க நினைத்து இளைஞர்கள் ஆட்சியில் அமர்வதற்கு வழிவகுக்கிறது. அந்த இளைஞன் ஆட்சியில் அமர்ந்த பின்பே தெரிகிறது, ஏற்கனவே இருந்த அரசியல் முதலைகளைவிட இவன் மிகப் பெரிய முதலை என்பது. இந்த புதிய அரசியல் முதலைக்கு பக்கபலமாக இருப்பது நக்சல்களாம்!

தமிழகத்தில் நேர்மையாக, துணிச்சலாக தமிழ்ப் பத்திரிகை நடத்தி, போலிகளின் முகத்திரையை கிழிக்கும் வடநாட்டுப் பதிப்பாளரைப் பார்த்து “பிழைக்க வந்தவன்” என்கிறான் வில்லன். இந்தக் காட்சியின் மூலம் பிராந்திய அரசியல் பேசுகிறவர்களை வில்லன்களாகவும், சுயநல அரசியல்வாதிகளாகவும் சித்தரிக்கிறார் இயக்குனர்.

அடுத்தபடியாக மாற்று அரசியலை முன்வைக்க நினைத்து, அரசியலில் கால்பதிக்கும் இளைஞர்களின் பக்கம் திரும்பியிருக்கிறது கே.வி.ஆனந்தின் பார்வை. பத்திரிகையே படிக்காத, தொலைக்காட்சியில் செய்தி பார்க்காத, சமூகப் பிரக்ஞை துளியும் இல்லாத ஒரு தலைமுறையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்போதுதான் புதிய சிந்தனைகளுடன் இளைஞர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அதற்குள்ளாக அவர்களையும் காயடித்து, அடுத்த தலைமுறையையும் நான்காம்தர அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கச் சொல்கிறார் ஸ்ரீமான் கே.வி.ஆனந்த்.



எல்லாவற்றுக்கும் மேலாக, நக்சல்கள் குறித்த கே.வி.ஆனந்தின் பார்வைதான் புல்லரிக்கவைக்கிறது. “ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்னு அரசியல்வாதிங்கதான் டயலாக் வச்சிருக்காங்கன்னா, நீங்க ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டல்னு டயலாக் வச்சிருக்கீங்க” என்று நக்சல்களைப் கே.வி.ஆனந்தின் ஹீரோ புரட்சி வசனம் பேசுகிறான். உலக அளவில் அறிவாளிகள் (Intellectuals) நிறைந்த ஒரு போராட்டக் குழுவாக பேசப்படும் மாவோயிஸ்ட் இயக்கம், தண்டகாரண்யத்தில் அரசால் செய்ய முடியாத சேவைகளை பழங்குடியின மக்களுக்கு வழங்கி வருகிறது. பல்லாண்டுகளாக அரசு உயர் அதிகாரிகளின் காலடி பட்டிராத வனப்பகுதிகளில் பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறார்கள் மாவோயிஸ்ட்கள். ப.சிதம்பரம் போன்ற அரசியல் அயோக்கியர்களின் சுயநலத்திற்காக, வேதாந்தா போன்ற பன்னாட்டு பண முதலைகளுக்கு வனவளமும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமும் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துதான் மாவோயிஸ்டுகள் போராடி வருகின்றனர். இதுபோன்ற உண்மைகள் எதுவும் தெரியாமல், கல்லூரி நண்பனை முதலமைச்சராக்க, பொதுக்கூட்ட மேடையில் நக்சல்கள் வெடிகுண்டு வைப்பதாகவும், தங்களது சுயநலத்திற்காக அப்பாவி பொதுமக்களைக் கொல்வதாகவும் சித்தரிக்கிறார் இயக்குனர். சமூக அக்கறை இல்லாமல், வெற்றியும் அதனால் கிடைக்கும் பணமுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் கே.வி.ஆனந்தின் பார்ப்பனீய முகத்தின் வெளிப்பாடே கோ!