புதன், 27 ஏப்ரல், 2011

நாஞ்சில் நாட்டு பருவமழை

நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை மிகச் சமீபத்தில்தான் படிக்கத் தொடங்கினேன். ஆனந்த் செல்லையா போன்ற நண்பர்களின் முன்னுரையோடு நாஞ்சில் நாடனை அணுகிய போது, அவரது எழுத்துக்களின் ஆழத்தை இன்னும் நெருக்கமாக ரசிக்க முடிந்தது. நாஞ்சில் நாட்டின் பருவ மழையை நான் பார்த்ததில்லை. ஆனால் அதன் வசீகரத்தையும், அதில் நனைந்து மனம் கரையும் அனுபவத்தையும் அவரது எழுத்துக்களின் மூலம் உணர முடிகிறது. ஒரு ஓய்வு நாளில் கும்பகோணம் சென்றபோது அவரது ‘சூடிய பூ சூடற்க’ படித்தேன். அதைப் பற்றி இரவெல்லாம் யோசித்தபடி இருந்தேன். விடிந்தபின்னும் அவரது சொல்லாட்சிகள் மனசைவிட்டு அகலவேயில்லை.

சென்னை திரும்பியபிறகு அவரது ‘பச்சை நாயகி’, ‘எட்டுத் திக்கும் மதயானை’ ஆகிய தலைப்புகளுக்கு, தலா ஒரு கொலாஜ் ஓவியம் வரைய முடிவெடுத்தேன். வரைவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் குறைவான பெயிண்ட் பிரஷ் மென்பொருளில் இந்த கொலாஜ் ஓவியங்களை வரைந்திருக்கிறேன். இது நாஞ்சில் நாடனுக்கு நான் செலுத்தும் நன்றி, மரியாதை, வாழ்த்து - இப்படி ஏதாவது ஒன்றாக வைத்துக் கொள்ளலாம்.